Friday, June 25, 2010

கொசுவத்தி!!

வித்யாவின் திருமணம் ஒரு மாசம் முன்னாடி நல்லபடியா நடந்து முடிஞ்சிருச்சு. நேத்தியோட, ஒரு மாசம் ஆச்சு அவளுக்கு கல்யாணமாகி. விஷ் பண்ணலாம்னு கூப்ட்டேன்.
நான்: "Congrats Vidi!"
வித்தி: எதுக்கு?
நான்: எதுக்கா? அடிப்பாவி, உனக்கு கல்யாணமாகி 1 மாசம் ஆகிடுச்சு. நானே ஞாபகம் வெச்சுருக்கேன் நீ மறந்துட்ட?
வித்தி: போ ஆசா. என்னத்த கல்யாணம் பண்ணி, என்னத்த கொண்டடுறதுனு 'என்னத்த கண்ணம்மா'கிட்டா.
கொஞ்சம் ஷாக் ஆனாலும், "சரி சரி. உன்னவரும் மறந்துருப்பாரு போல. எதாவது ஸ்பெஷல்லா பண்ணு"னு ஃபோன வெச்சுட்டேன். அடுத்த நாள் அவரிடமிருந்து என்ன ரியாக்ஷன் வந்ததுனு ஆர்வமா கேட்டா, "ஒரு மாசம் தான ஆச்சு? ஒரு வருஷம் ஆகல்ல?"னு கேட்டு டாபிக்க க்ளோஸ் பண்ணிட்டாராம். அவருக்கு அவர் பர்ஸ் தப்ப வேண்டுமென்ற கவலை!
சமையல் கட்டு பக்கமே போகாத வித்தி ஏதேதோ புதுசு புதுசா செஞ்சு அசத்துறாளாம். அவளோட அவர், மெல்லவும் முடியாம முழுங்கவும் முடியாம வாயடைச்சு போயிருக்காராம். விதி வலியது!
வித்திய பத்தி பேசும் போது ஞாபகத்துக்கு வருது. வித்யா கல்யாணத்த பார்த்துட்டு திரும்பி வரும் போது, ரோட்ல ஒரு பலியாட மாலையும், மஞ்சளுமா கூட்டிட்டு போயிட்டு இருந்தாங்க. பாக்க ரொம்ப பாவமா இருந்துச்சு. இத ஏன் சொல்றேன்னா.. அப்புறமா சொல்றேன்.

*****

கொஞ்ச நாளைக்கு முன்னாடி, "கராத்தே கிட்" படம் பார்த்தேன். படம் ரொம்ப நல்லா இருந்துச்சு. எனக்கு ரொம்ப பிடிச்சது. கிளைமாக்ஸ் இந்தியன் டைப்பா இருந்ததாலும், கிளைமாக்ஸ் பைட் இளையதளபதியின் பத்ரியை ஞாபகபடுத்துனதுனாலும் கைதட்டி என்ஜாய் பண்ணேன். :-) ஜேடன் ஸ்மித், என்னம்மா நடிச்சிருக்கான்? அவனது ரியாக்ஷன்ஸ், கிளாஸ்! சிறுவனுக்கு இப்போவே ஸ்டமக் பேக்ஸ் இருக்கு! வில் ஸ்மித் பையன்னா சும்மாவா? நம்ம ஊர் நடிகர்கள் 3 பேக்ஸ், 6 பேக்ஸ் எல்லாம் வெச்சுட்டு விடுற அலப்பறை. ஹும்ம்! ஜாக்கி சானுக்கு வயசாய்டுச்சு. ஆனா, ஒரு ஸ்டன்ட் சீன் பார்த்தப்போ, மனுஷன் இன்னும் இளமையாதான் இருக்கார்னு தோணுச்சு! Hats off, Jackie Sir!

*****

ஒரு ரெண்டு, மூணு நாளைக்கு முன்னாடி இளையதளபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து எழுதினேன். வெடித்தது வீட்டில் பூகம்பம். வேற யாரு, என் அருமை தங்கச்சி டீனா தான்.
டீனா: "ஏய், விஜய் பத்தி எழுதி இருக்கியே, என்னிக்காவது என்னை பத்தி எழுதனும்னு தோணுச்சா?"
நான்: "அதான், உன்னை பத்தி டெர்ரர்னு ஒரு பதிவு எழுதி இருக்கேனே?"
டீனா: "அதெல்லாம் தெரியாது, நீ என்னை விஷ் பண்ணி எழுதல"
நான்: "உனக்கு இன்னும் பர்த்டே வே வரலியே?"
டீனா: "அதெல்லாம் தெரியாது, பாரு நீ விஜய்க்கு கேக் எல்லாம் கொடுத்துருக்க (அந்த பதிவுல ஒரு கேக் படம் இணைச்சிருப்பேன்). எனக்கு எதாச்சும் செஞ்சிருப்பியா?"
ஏதோ, நானே என் கையால விஜய்க்கு கேக் செஞ்சு கொடுத்த மாதிரியும், அவளுக்கு நான் இது வரைக்கும் ஒன்னுமே செஞ்சது இல்லைன்ற மாதிரியும் ஏசிட்டிருந்தா. "ஏய், நான் உனக்கு என்ன எல்லாம் செஞ்சுருக்கேன். மறந்துட்டியா?"னு கேட்ட ஒடனே ஒன்னு சொன்னா பாருங்க, அப்படியே ஷாக் ஆய்ட்டேன். "எனக்கு அதெல்லாம் தெரியாது. நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ. என்னை பத்தி ஒரு கவிதை எழுதனும். இல்லை, என்ன நடக்கும்னு எனக்கே தெரியாது"னு சொல்லிட்டு ஃபோன வெச்சுட்டா. கவிதையா? நானான்னு? டெர்ரர் ஆகியிருக்கேன்.

*****

சரியா 1 வீக் முன்னாடி, என் நிச்சயதார்த்தம் முடிந்தது, இனிகோவோட:-). நிச்சயதார்த்தம் அப்போ ரிங் மாட்டி விடுவாங்க இல்ல அப்போ தான் அந்த துயர எண்ணம் எழுந்தது. வேற ஒண்ணுமில்ல, அவர் ரிங் மாட்டும் போது, மேல சொன்னேன் பாருங்க, பலியாடு, அது தேவையில்லாம ஞாபகத்துக்கு வந்துச்சு. என்னடா இது அபசகுனமானு தோணுனாலும், அவர் என் பக்கத்துல அப்படி தான் நின்னுட்டு இருந்தார். போட்டோக்ராபர், எவ்ளோ ட்ரை பண்ணியும் மனுஷன் மொகத்துல தக்ளியூண்டு சிரிப்பு கூட வரல. பாவமா இருந்துச்சுன்னு டீனா சொன்னா. நான் அப்படி என்னதான் பண்ணிட்டேன்? :-(

*****

நிச்சயதார்த்தம் அன்னிக்கு நடந்தது இன்னொரு காமெடி. மேடைல அழகா, பெருசா ஒரு சோபா போட்டிருந்தாங்க. போட்டிருந்த மாலையும், ஜடையும் ரொம்ப வெய்ட்டா இருந்ததால, "எப்படா உக்காருவோம்?"னு இருந்துச்சு. மேடை ஏறுன ஒடனே சோபால ஒக்கார போய்ட்டேன். பக்கத்துல இருந்த சித்தி என் கைய கிள்ளி, "வரவங்களுக்கு எல்லாம் வணக்கம் சொல்லு"னு சொன்னாங்க. பங்க்ஷன் முடியுற வரைக்கும் ஆளுங்க வந்துட்டே இருந்தாங்க. அதனால வணக்கம் சொல்ற பொசிஷன மாத்தல. இதுக்கு என் சகலை கிண்டலா, "ஏம்மா, ஏதாவது எலெக்ஷன்ல நிக்குறியா?"னு கேட்க, நான் "பெரியவங்க தான் வணக்கம் சொல்ல சொன்னாங்க. வணக்கம் சொல்லிட்டு கைய கீழ போட சொல்லல"னு சொன்னேன். அவர் என்னை ஒரு மார்க்கமா பாத்துட்டு போய்ட்டார்.

Tuesday, June 22, 2010

நல்வாழ்த்துக்கள்!

எங்கள் இளையதளபதிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!
வரும் வருடம் தளபதிக்கு இனியதாக அமைய வாழ்த்துக்கள்!! :))


இளையதளபதினா பாட்டு, டான்ஸ் இல்லாமலா? அந்த வகையில், எனக்கு பிடித்த பாடல்கள் உங்களுக்காக. என்ஜாய் பண்ணுங்க!! :))



இந்த பாட்டு எனக்கும், தன்ஸ்க்கும் ஃபேவரிட் பாட்டு. முதல் சரணத்தின் முடிவில் வரும் ஹம்மிங்கின் போது தளபதி தலையசைப்பார் பாருங்கள்! க்யூட்! :))
Specially dedicating to my friend!! :)





இது, என்னுடைய ஆல் டைம் ஃபேவரிட். எல்லா ப்ளேலிஸ்டிலும் இருக்கும் பாட்டு. ஒவ்வொரு தடவையும் இந்த பாட்டு ப்ளே ஆனா லூப்ல தான் இருக்கும். அந்த அளவுக்கு வெறித்தனமா பிடிச்ச பாட்டு. :))





நன்றி: கூகிள் மற்றும் யூட்யூப்

Wednesday, May 12, 2010

ஆசா, நீ ரொம்ப நல்லவ செல்லம்!!

ஒரு மனுசன் பொறந்ததிலிருந்து சாகற வரைக்கும் அவனுக்கு தெரிஞ்சோ தெரியாமலோ பல அல்லது சில நல்ல காரியங்களை செஞ்சிருப்பான். அதை எல்லாம் வெளிய சொல்ல கூடாதுன்னு பெரியவங்க சொல்வாங்க. ஆனா, நம்ம தல கவுண்டர் என்ன சொல்றார்? 'நீ சொல்றத அப்படியே தஞ்சாவூர் கல்வெட்டுல பதிச்சு வை. உனக்கு பின்னாடி வர்ற சந்ததிகள் அதே பார்த்து புரிஞ்சு தெளிவா நடந்துக்குவாங்க.' அவர் 'சொல்றத'னு சொன்னாலும் நாம நல்லது செய்யுறதையும் இப்படி வெளிய சொன்னா தான மத்தவங்களுக்கு ஒரு இதுவா இருக்கும். அதாங்க inspiration. அதனால, போன மாசத்துலே இருந்து இந்த மாசம் வரைக்கும் நான் செஞ்ச நாலு சேவைய (நோ.. பயப்படாதேள்.. நான் சொல்றது சமூக சேவைய. சாப்பிடுற சேவை இல்ல) இங்க சொல்ல போறேன். தஞ்சாவூர் கல்வெட்டு கெடைக்கல, அதான் இங்க.

மொதல் சேவை:
நான் லஞ்ச் சாப்ட்டு முடிச்சிட்டு, தட்டு வைக்க போகும்போது, டமால் டுமீல்னு பெருசா ஒரு சத்தம். 'நாம மனசுக்குள்ள பாடுனது வெளிய கேட்டுருச்சு? அதுக்கு பில்டிங் இடியறது எல்லாம் ரொம்ப ஓவர்'னு நெனச்சுக்கிட்டே திரும்பினா, அங்க ஒரு பையனோட டிபன் பாக்ஸ் கீழ சிதறி கெடந்துச்சு. அத பார்த்த நம்ம பிஞ்சு மனசு தாங்குமா? அதனால ஓடிப்போய் டிபன் பாக்ஸ் எடுத்து கொடுத்தேன். அதுக்கு அந்த பையன் மொகத்துல்ல எவ்ளோ சந்தோஷம், எவ்ளோ ஆனந்தம்? மகிழ்ச்சில 'Thanks. Thank you so much. Thank you very much'னு மாத்தி மாத்தி சொல்லிட்டு இருந்தான். நானும், 'Please don't mention it'னு கெத்தா சொல்லிட்டு நடைய கட்டுனேன். அன்னிக்கு என் மனசு எவ்ளோ லேசா இருந்துச்சு தெரியுங்களா? அன்னிக்கு பூரா 'லேசா..லேசா'னு என் மனசு பாடிட்டே இருந்துச்சு. மொள்ளமா.

ரெண்டாவது சேவை:
சமூக சேவை செய்யுறதே புண்ணியம். அதை புண்ணிய பூமியான சர்ச்சில் (கும்பிடுற சர்ச் பா.. கூகிள் சர்ச் இல்ல) செஞ்சா? புண்ணியம் XXL. ஒரு நல்ல ஞாயிற்று கிழமை சர்ச்சில் mass கவனித்து கொண்டிருந்தேன். நான் ஒக்காந்திருந்த பெஞ்சில் ஒரு இடமும், எனக்கு முன்னாடி இருந்த பெஞ்சில் ஒரு இடமும் காலியாக இருந்தது. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்தாங்க ஒரு தம்பதி (அந்த அம்மிணி ஒரு மினி ஸ்கர்ட்டு போட்டிருந்தாங்க. அந்த அய்யா அரை டிராயர் போட்டிருந்தார். தலையில் முள்முடி, அதாங்க spikes வெச்சிருந்தார்.) ஒண்ணா ஒக்கார எடம் இல்லைன்னு அம்மிணி என் பக்கத்துலயும், அய்யா முன்னாடி பெஞ்சுக்கும் போகும்போது நான், 'Excuse me'னு சொல்லி வெளிய வந்து அவர அம்மிணி பக்கத்துல ஒக்கார சொல்லிட்டு முன்னாடி பெஞ்சுல பொய் ஒக்காந்திக்கிட்டேன். அப்பவும் என் மனசு லேசாகி 'லேசா..லேசா' னு பாட ஆரம்பிச்சுது. 'உஷ். இது சர்ச். இந்த பாட்டெல்லாம் பாடப்படாது'னு சொல்லி அடக்கி வெச்சேன்.

மூணாவது சேவை:
நான் வழக்கமா ரவுண்டு கட்டியடிக்கிற பானி பூரி ஸ்டாலில் அன்னிக்கு ரவுண்டு ச்சே க்யூ கட்டி கூட்டம். எனக்கு பின்னாடி வந்த ரெண்டு பொண்ணுங்க, 'இவ்ளோ கூட்டமா இருக்கே. லேட்டாகும். ஹோஸ்டெல்ல சாப்பாடு க்ளோஸ் பண்ணிடுவாங்க. நாம இன்னொரு நாள் வரலாமா?'னு பேசிகிட்டு இருந்தாங்க. இத கேட்ட ஒடனே என் நெஞ்சு பதைபதைச்சுது. 'நீங்க எனக்கு முன்னாடி நின்னுக்கோங்க'னு எடம் விட்டு நின்னேன். என்னை ஒரு மார்க்கமா பார்த்துட்டே தேங்க்ஸ் சொல்லிச்சுங்க அந்த பொண்ணுங்க. ஆனாலும், என் மனசு அன்னிக்கு பூரா சந்தோஷமா 'லேசா.. லேசா'னு பாடுச்சு. ஏன்னா, தானத்தில் பெரியது மைதானம் ச்சே அன்னதானம். அதையும் நான் செஞ்சுட்டேன்ல.

பாருங்க, நான் செஞ்ச இந்த சேவைகள்னால தான் வெய்யில் பொளந்து கட்டுனாலும் எங்கூருல மழை பெயஞ்சிட்டு இருக்கு. என்னை ரோல் மாடலா வெச்சு நீங்களும் நாலு சமூக சேவை செய்யுங்க. அப்போ தான் நாட்டுல மும்மாரி பொழியும். இதுல இருந்து நான் என்ன சொல்ல வர்றேன்னா, 'சமூக சேவைன்னா எனக்கு நெம்ப பிடிக்கும்.' :-)

பி.கு:- முதல் பத்தியில நாலு சேவைன்னு சொல்லிட்டு மூணு தான் சொல்லி இருக்க. இன்னொன்னு எங்க?ன்னு கேட்டீங்கன்னா, உங்களுக்கு இந்த வார கொட்டு. கவனிக்கவே இல்லைனா, இ.வா.பூச்செண்டு. நாங்களும் ஞாநி தான்.

Wednesday, April 14, 2010

சித்திரை திருநாள்!

இன்று சித்திரை திருநாள்! கடந்த 4 வருடமாக ஒவ்வொரு சித்திரை திருநாளுக்கும் ஊருக்கு சென்று விடுவதால், ரூமில் பிரெண்ட்ஸோடு கொண்டாடும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. இந்த வருடம், ஓர் இனிய அனுபவமாய் இருந்தது.

நேற்று, ஆபீசிலிருந்து வரும்பொழுதே தன்யா ஆப்பிள், வாழைப்பழம், சப்போட்டா, பழக்கூடை எல்லாம் வாங்கி வந்தாள். அவள் வாங்கியதை என்னிடம் காட்டியபொழுது தான் கவனித்தேன் மாம்பழமும், பூவும் மிஸ்ஸிங். அதனால் அவளிடம்,

"பூ வாங்கலையா தன்ஸ்?"
"மறந்துட்டேன் ஆஷா"
"சரி, மாம்பழம்?"
"எனக்குத்தான் மாம்பழம் ஒத்துக்காதே, அதனால வாங்கல."
"உனக்குத்தான ஒத்துக்காது. எனக்கு ஒத்துக்கும் இல்லே?"
"மறந்துட்டேன் ஆஷா"

முறைத்தேன். வசீகராவில் விஜய், வடிவேலு முன் டைப் டைப்பாக முழிப்பது போல் முழியை மாற்றி காட்டினாள். "த பாரு. நீ சும்மா பார்த்தாலே சுருண்டுருவேன். இப்படியெல்லாம், டைப் டைப்பா முழிச்சு கொழந்தைக்கு பயங்காட்டாதே." என்று கூறி எஸ்ஸானேன்.

நல்லவேளை, இதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல், 'நள்ளிரவு' 5:00 மணிக்கு என்னை 'கனி' பார்க்க எழுப்பிவிட்டாள். கொட்டாவி விட்டுக்கொண்டே கண்ணாடி முன் வைத்திருந்த கனிக்கூடையை பார்த்துவிட்டு மறுபடியும் ப்ளாட்டானேன்.

தன்யா, அலங்காரம் செய்த கனிக்கூடை இதோ:


அனைவருக்கும், என் இனிய சித்திரை திருநாள் நல்வாழ்த்துக்கள்! :)

Saturday, April 10, 2010

நீங்களும் டோஸ்ட்மாஸ்டர் தான்!

மு.கு:- தலைப்ப பார்த்து, இது 'சரக்கு' பத்தின பதிவுன்னு நினைச்சிட வேண்டாம். இது முழுக்க முழுக்க, கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் (communication skills) பத்திய பதிவு. :)


இன்றைய நவீன யுகத்தில், கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் மிகவும் அத்தியாவசியமானது. Career-ல் முக்கிய பங்கு வகிக்கும் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் நம்மில் பலருக்கு எட்டாக்கனியாக இருக்கிறது. அந்த எட்டாக்கனியை பறிக்க உதவும் ஒரு சிறு சாதனம் தான், 'டோஸ்ட்மாஸ்டர்ஸ் செஷன்ஸ்'.

'டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டர்நேஷனல்.' எவ்வளவு பேர் இந்த பெயரை கேள்வி பட்டிருக்கிறீர்கள் என்று தெரியாது. அதனால், ஒரு சின்ன முன்கதை சுருக்கம். டோஸ்ட்மாஸ்டர்ஸ் இன்டர்நேஷனல், ஒருவரின், கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ், பப்ளிக் ஸ்பீகிங் ஸ்கில்ஸ், மற்றும் லீடர்ஷிப் ஸ்கில்ஸ்-களை வளர்த்து கொள்ள உதவும் ஒரு non-profit organization. இது, உலகெங்கும் இருக்கும் கிளப்ஸ் மூலமாக இக்கலைகளை நமக்கு கற்று கொடுக்கிறது. இது பற்றிய மேலதிக விபரங்களுக்கு http://en.wikipedia.org/wiki/Toastmasters_International - க்கு செல்லவும்.

டோஸ்ட்மாஸ்டர்ஸ் செஷன்களை எங்கள் டீமிலும் நடத்திக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு புதன்கிழமை மதியம் 3:00 டு 3:30 இந்த செஷன்கள் நடக்கும். ஒவ்வொரு செஷனும்,

* 3 Prepared speeches
* 3 Impromptu (or) extempore speeches
* Feedback sessions

என்று மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கும். செஷனை நடத்த ஒரு MC (Master of Ceremony), இரண்டு நடுவர்கள், ஒரு டைமர், மற்றும் ஒரு ஃபில்லர் கவுன்ட்டர் இருப்பார்கள் (ஃபில்லர் - வார்த்தை வெளி வராத போது நாம் உபயோகிக்கும் சொற்கள். ஆங்கிலத்தில் - uh, ah, um, லைக் போன்ற சொற்கள்). இதில், நடுவர்களை தவிர மற்ற எல்லோரும் ரொடேஷன் முறையில் பங்கெடுப்பர். ஒரு Prepared speech 3 நிமிடத்திற்கும், ஒரு impromptu speech 1 நிமிடத்திற்கும் நடக்கும். மீதி நேரத்தில், audience feedback மற்றும் நடுவர்களின் கமெண்ட்ஸ் கேட்கப்படும்.

பலர் குழுவில் இருக்கும் பொழுது நன்றாக பேசுவார்கள். ஸ்டேஜ் அல்லது போடியமில் ஏறிவிட்டால் பற்கள் டைப் அடிக்க ஆரம்பித்துவிடும். சிலர் குழுவில் அவ்வளவாக பேச மாட்டார்கள். ஆனால், ஸ்டேஜில் கலக்கி விடுவார்கள். நான் முதல் ரகம். எனது முதல் prepared speech படு மொக்கையாகிவிட்டது. ஜட்ஜ்களிடமிருந்து ஏகப்பட்ட கமெண்ட்ஸ். ஆனால், அடுத்தடுத்து பங்கு பெற்றதில் ப்ராக்டிஸ் ஆகி, prepared speech-ல் கலக்க துவங்கிவிட்டேன். ஆனால், impromptu? அதில் தேறுவதற்குள் செஷன் நடத்துவதை நிறுத்திவிட்டார்கள். சில மேலிட மாற்றங்களாலும், 'டோஸ்ட் எங்கே?' (பிரட் டோஸ்ட் அல்ல) என்று சில ரவுடி எலிமென்ட்ஸ் கேட்டு டர்ரியல் ஆக்கியதாலும் அதை நிறுத்திவிட்டார்கள். :)

இது போன்ற செஷன்கள் ஒருவரின் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் எந்த நிலையில் இருக்கிறது என்று வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதை மேம்படுத்தவும் உதவும். கொடுத்திருக்கும் டைம் ஃபிரேமுக்குள் பேசுவதால் டைம் மேனேஜ்மென்ட்டும், மக்களை உங்கள் பேச்சால் கவர யுத்திகள் செய்வதால் பீபிள் மேனேஜ்மென்ட்டும், கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ் உடன் வரும் இலவச இணைப்புகள். ஆகவே, ஒவ்வொரு அலுவலகத்திலும் டோஸ்ட்மாஸ்டர்ஸ் போன்ற செஷன்கள் நடத்துவது மிகவும் நன்மைக்குரியது.( அது மட்டுமில்லை, அரை மணி நேரம் ஓபி அடிக்கலாம் பாருங்கள்!). கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ், டைம் மேனேஜ்மென்ட், பீபிள் மேனேஜ்மென்ட்; இந்த மூன்றும் இருந்தால் லீடர்ஷிப் ஸ்கில்ஸ் தானாக வந்துவிடும். அப்புறமென்ன, மேனேஜ்மென்ட் ஏணியில் ஏறுமுகம் தான் உங்களுக்கு.

இந்த செஷன்கள் ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. எந்த மொழியில் உங்களுக்கு கம்யூனிகேட் பண்ண வேண்டுமோ அந்த மொழியில் நடத்தலாம்.

டோஸ்ட்மாஸ்டர்ஸ் செஷன்களை அவ்வபொழுது உங்கள் குடும்பத்திலும் நடத்தலாம். படிக்கும் பிள்ளைகள் இருந்தால் அவர்களை கதை சொல்லவோ அல்லது எதாவது தலைப்பு கொடுத்தோ பேச சொல்லலாம். வேலைக்கு செல்லும் தம்பதியருக்குள் இதுபோன்ற செஷன்களை நடத்துவது career முன்னேற்றத்திற்கு மிகவும் உதவும். (கவனிக்க: மனைவிகள் கணவன்களுக்கு எடுக்கும் செஷன்கள் இதில் கணக்கில் வராது ;) )

டோஸ்ட்மாஸ்டர்ஸ் செஷன்ஸ் உங்கள் அலுவலகத்தில் நடத்துவதில்லை என்றால், உடனே சென்று உங்கள் மேனேஜெரிடம் பரிந்துரை செய்யுங்கள். உங்கள் பரிந்துரை ஏற்கப்பட்டுவிட்டது என்றால் வருகிற appraisal-ல் இதை போட்டு ஆப்புரைசல் ஆகாமல் பார்த்து கொள்ளலாம். அப்புறமென்ன, நீங்களும் டோஸ்ட்மாஸ்டர் தான்!


பி.கு: பதிவில் ஆங்கில சொற்களை கலந்ததற்காக மன்னிக்கவும். அவற்றிற்கு இணையான தமிழ் சொற்களை அறியாததே காரணம். உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டத்தில் கூறுங்கள். அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறது. :)

Thursday, April 01, 2010

சுறா புறாவாகி விடுமா?

நான் இளையதளபதியோட தீவிர ரசிகைங்க. அவரோட படம் ரிலீஸ் ஆகுதுனா, அந்த படத்தோட வால்பேப்பெர்ஸ், ஸ்டில்ஸ், பாட்டுனு என் சிஸ்டம்ல டவுன்லோட் பண்ணி வெச்சுப்பேன். சுறா இன்னும் கொஞ்ச நாள்ல ரிலீஸ் ஆக போகுது. சரி, வால்பேப்பெர்ஸ் டவுன்லோட் பண்ணலாம்னு கூகிள்ல 'சுறானு' டைப் பண்ணேன். என் கெட்ட நேரம், சர்ச் ரிசல்ட்ஸ் எல்லாத்துலயும் "சுறா காமெடி சீன்", "சுறா கோர்ட் சீன்"னு இருந்துச்சு. நானும் ஆர்வ கோளாறுலே அந்த லிங்க் ஓபன் பண்ணிட்டேங்க. நொந்து நூடுல்ஸ் ஆயிட்டேன். அதே பார்த்த ஒடனே எங்க 'சுறா' 'புறா'வாகி தியேட்டர் விட்டு பறந்துடுமோனு பயம் வந்துடுச்சு.

அந்த சீன்ல அவர் பண்ணி இருக்கும் அல்டிமேட் காமெடி பார்க்க, இந்த லிங்க் கிளிக் பண்ணுங்க.

எனக்கு அழுவ அழுவையா வருது. :'(

Wednesday, March 24, 2010

டெர்ரர்’ஸ் எர்ரர்!

அவள்: ஏய்.. எப்படி இருக்கே?
நான்: ம்ம். நல்லா இருக்கேன்.
அவள்: கொட்டிக்கிட்டியா?
நான்: கொட்டிக்கிட்டியா கிட்டிக்கிட்டியானு பேசுன வந்து மண்டைல கொட்டிடுவேன் ஆமா.
அவள்: ஹா ஹா ஹா.. மொதல்ல வீட்டுக் கதவுக்குள்ளே நொழய முடியுமான்னு பாரு.

இப்படியெல்லாம் என்னை பார்த்து கேள்வி கேட்குற தைரியம் இந்த உலகத்துலேயே ஒருத்தருக்கு தாங்க இருக்கு. அது, என் தங்க தங்கை டீனா. அவள் வாய் பராக்கிரமங்களில் சிலவற்றை இப்பொழுது பார்ப்போம்.

*****

அப்பா: டீனா. டெக்ஸ்ட் புக்ஸ் மாத்திரம் படிச்சா போதாதுமா. Extra Knowlede க்கு சப்ஜக்ட் சம்பந்தபட்ட புக்சும் படிக்கணும்.
டீனா: டாடி, புக்ஸ் படிக்க சொல்றத எப்போ நிறுத்த போறேங்க? மா, எங்கே இருந்து மா பெத்தீங்க அப்பாவே?
அம்மா: ம்ம்க்கும். நான் பெத்திருந்தா தங்கமால இருந்திருக்கும். உங்க பாட்டி பெத்தது அப்படி தான் இருக்கும்.
அப்பா: ??!!

(ஹ்ம்ம். இவள எங்கே இருந்து தான் பெத்தாங்களோ?)

*****

(இது, அவ 3 வயசா இருக்கும் போது உதிர்த்தது)

அம்மா: இன்னிக்கு அப்பாக்கும் எனக்கும் கல்யாண நாள். கோயிலுக்கு போயிட்டு அப்படியே ஹோடேல்க்கு போலாம்.
(டீனா அழத்துவங்குகிறாள்)
அம்மா: ஏம்மா அழறே?
டீனா: நீங்களும் டாடியும் கல்யாணம் பண்ணி போயட்டீங்கனா, நானும் ஆஷாவும் அனாதை ஆயடுவோம்ல. எங்களை யார் பார்த்துக்குவா?
அம்மா: ??!!

(எப்படியெல்லாம் யோசிக்கிறா?)

*****

டீனா: ஏய் உன் இளைய’தொல்ல’பதிய பத்தி SMS அனுப்பிச்சேனே படிச்சியா?
நான்: இப்படியெல்லாம் SMS அனுப்புனே, ‘சிங்கம்’ அசிங்கமாய்டும் ஆமா.
டீனா: ஹே ஹே.. நாங்க ‘சுறா’வ புட்டு செஞ்சு சாப்புடுவோம்ல.
நான்: கிர்ர்ர்.

(என்ன ஒரு வில்லத்தனம்?)

*****

பார்த்தீங்களா மக்களே இந்த கொடுமையே? நான் டீனா கிட்ட பஞ்சர் ஆகாத நாளே இல்ல. அவ வாயாலயும் கையாலயும் அடிக்கிறத தினமும் வாங்கி, நான் ‘இரும்பு கோட்டை முரட்டு சிங்கம்’ ஆய்ட்டேன்.

என் அப்பாவே அவர் ஆபீஸ்ல, அவரோட சிம்ம கர்ஜனைக்காக ‘The Terror’னு கூப்பிடுவாங்களாம். இப்போ இது எதுக்குன்னு கேக்குறீங்களா? ஒருமுறை தலைப்ப படிச்சு பாருங்க, என் தங்கச்சிய பத்தின உண்மை வெளங்கும். :)

Friday, March 19, 2010

கூல்ட்ரிங்ஸ்!!

தமிழ். வீட்டிற்கு செல்லப்பிள்ளை. குழந்தைகளை அவனிடம் விட்டுவிட்டு வீட்டு வேலைகளை நிம்மதியாக செய்து முடிக்கலாம். அவ்வளவு பொறுப்பாக பார்த்து கொள்வான். அமைதியும் கூட. அவன் வயது சிறுவர்கள் அடிதடி ஆட்டத்தில் இறங்கினால், அந்த இடத்தில் இருக்க மாட்டான், தமிழ். இந்த நல்ல பெயர் எல்லாம் சிறிது நாளைக்கு தான் நிலைத்து இருந்தது. இரண்டு சம்பவங்களால் அவனது நல்ல பிள்ளை இமேஜ் தூள் தூளானது. தண்ணீர் கலைகிறது. அதாங்க, ப்ளாஷ்பேக்.


சம்பவம் 1:

தமிழின் மாமா ஒரு குடிகாரர். மொடாகுடியர் இல்லையென்றாலும், தினமும் இரவு ஒரு பெக் அடித்து விட்டு தான் தூங்குவார். அவர் குடிக்கும்பொழுது, தமிழ் அவர் பக்கத்தில் நின்று கொண்டு, “என்ன மாமா இது?” என்று கேட்பான். அவரும், “இது கூல்டிரிங்க்ஸ் டா” என்பார். “எனக்கும் வேணும்” என்று தமிழ் அடம பிடித்தால், “இதெல்லாம் சின்ன பசங்க குடிக்க கூடாது. சளி பிடிச்சிடும்” என்று கூறி அனுப்பி விடுவார். மாமா குடித்து விட்டு பாட்டிலை கட்டிலுக்கு அடியில் துணி போட்டு மறைத்து வைப்பது வழக்கம். ஒரு நாள் வீட்டில் குழந்தைகள் எல்லாம் கண்ணாமூச்சி விளையாண்டு கொண்டிருந்தார்கள். தமிழ் கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொள்ள, அவன் காலில் ஏதோ தட்டுப்பட்டது. என்னவென்று துணியை விலக்கி பார்த்தால், ‘கூல்டிரிங்க்ஸ்’ பாட்டில். உற்சாகம் தாங்காமல் மற்ற சிறுவர்களை எல்லாம் ரகசியமாக கூப்பிட்டு “வாங்கடா, கூல்டிரிங்க்ஸ் குடிக்கலாம்” என்றான். “முதல்ல எனக்கு குடுடா” என்று கெஞ்சிய வெண்ணில்லாவிடம் பாட்டிலை குடுத்தான். அவளும் சிறிது குடித்து விட்டு, “அய்யய்யே! மருந்து மாதிரி கசக்குது, நீயே குடி” என்று கொடுத்துவிட்டாள். மருந்து என்றவுடன் மற்றவர்களும் வேண்டாம் என்று சொல்லிவிட, ஆசையோடு பாட்டிலை வாய்க்குள் கவிழ்த்தான். முதல் மிடறு கசத்தது. ஆனால், என்னவோ பிடித்திருந்தது. இரண்டாவது வாய் குடிக்கலாம் என்று பாட்டிலை தூக்கியபோது சித்தி பார்த்துவிட்டாள். பிறகென்ன, அம்மா தமிழை பட்டை கிளப்ப, அத்தை மாமாவை பட்டை கிளப்பினார்.


சம்பவம் 2:

குடும்பத்தோடு அனைவரும் ஊட்டி சென்ற சமயம். குளிரில் எல்லாரும் நடுங்கி கொண்டு இருந்தார்கள் என்று மாமா கொண்டு வந்திருந்த பிராண்டி பாட்டிலில் இருந்து கொஞ்சம் ஒரு டம்ளருக்குள் ஊற்றினார். “அரை டம்ளர் அளவு ஊத்தியிருக்கேன். பன்னண்டு பேரும் குடிக்கணும். டேய் தமிழ், ஒரு வாய் குடிச்சிட்டு மிச்சத்தே மத்தவங்களுக்கும் குடுடா” என்றார். ‘கூல்டிரிங்க்ஸ்’ குடிக்கும் ஆர்வத்தில் தமிழ் அவர் சொன்னதை காதில் வாங்கி கொள்ளவே இல்லை. டம்ளரை வாங்கி அத்தனையையும் குடித்து விட்டு “I am a complan boy” என்று வாயை துடைத்து கொண்டு கூறினான். அவ்வளவு தான். மீண்டும் அடி பட்டையை கிளப்பியது. இம்முறை மாமாவிடமிருந்து.

இவ்விரண்டு சம்பவங்களிலிருந்து தமிழ் ஒன்றை புரிந்து கொண்டான். கூல்டிரிங்க்ஸ் ‘உடல்நலத்திற்கு’ கேடு என்று. அன்றிலிருந்து இன்று வரை தமிழுக்கு கூல்டிரிங்க்சும் சரி, ஹாட்டிரிங்க்சும் சரி, a definite no-no. அப்பேர்பட்ட தமிழுக்கு இன்று வந்தது சோதனை. அவன் காதலி ரூபத்தில்.


*****


“தமிழ். நான் வேற ஒருத்தர கல்யாணம் பண்ணிக்க போறேன். தெரியும் இல்லே?”

“ம். தெரியும்.” குரல் கம்மியது தமிழுக்கு.

“அவர் நல்லா சம்பாதிக்கிறாரு. மும்பைலே சொந்த வீடு, கார் எல்லாம் இருக்கு. நான் கேட்டதெல்லாம் வாங்கி தர்றேன்னு சொல்லி இருக்காரு”

“என்னம்மா பேசுற நீ? நான் உனக்காக என்னல்லாம் செஞ்சிருக்கேன். நீ கேட்டதெல்லாம் நானும் வாங்கி குடித்திருக்கேன். உனக்காக எவ்வளோவோ விட்டுக்கொடுத்திருக்கேனே? எல்லாத்தையும் மறந்துட்டியா?” அழுகையோடு கேட்டான்.

“ம்ம். நீ செஞ்சே. இல்லேன்னு சொல்லலே. ஆனா, நான் உன் கூட இருக்குறத விட அவர் கூட இன்னும் வசதியா இருப்பேன். பை.”

இந்த வார்த்தைகள், சாப்பாட்டில் மொய்க்கும் ஈ போல் தமிழின் மனதை அசிங்கப்படுத்தியது.

“டேய் மச்சான்! அவள பத்தி நான் உன் கிட்டே ஏற்கனவே சொல்லி இருக்கேன். நீ கேட்கல. அவள மாதிரி பொண்ணுங்க எல்லாம் safety, security பாப்பாளுக டா. நமக்கு சரி பட்டு வராது. சரி. நடந்தது எல்லாம் நல்லதுக்குனு நினைச்சிக்கோ. டாஸ்மாக் போய் சரக்க உள்ளே ஏத்துனோம்னா எல்லாம் சரியாயிடும். எந்திரிச்சு வாடா.” சிவா கூப்பிட்டான். வானம் மோடமாக இருந்தது.


*****


டாஸ்மாக். தன் முன்னிருந்த பாட்டிலை உற்று பார்த்தான் தமிழ்.

“நீ என்னை பத்தி கொஞ்சம் யோசிச்சியா நந்தினி? நீ இல்லாம எப்படி இருப்பேன்?”

“என்ன, கொஞ்ச நாளைக்கு தாடி வளத்து டாஸ்மாக் முன்னாடி விழுந்து கிடப்ப. வீட்லே கல்யாணம் பண்ணி வெச்சாங்கன்னா, நீயே கொஞ்ச நாள்லே எல்லாத்தயும் மறந்துடுவே. இதுக்கெல்லாம் கவலை பட்டா வாழ்கையை ஓட்ட முடியாது.”

அவள் சொன்னது உண்மையாவதை நினைத்து புலம்ப துவங்கினான் தமிழ்.


*****


தமிழ் டாஸ்மாக்கில் இருப்பதை தெரிந்து கொண்டு அங்கு வந்தார் அவன் மாமா.

“மாப்ள. என்னடா இது? எதாவது பிரச்சினையா? சரக்கடிச்சியா? கண்ணெல்லாம் செவந்திருக்கு? எதுவா இருந்தாலும் வீட்லே போய் பேசிக்கலாம்டா.”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை மாமா. நான் நல்லா தான் இருக்கேன்.”

“மாமா”

“சொல்லு மாப்ள”

“மாமா, நான் இன்னிக்கு அம்மா அப்பா கிட்ட பேசுறேன். உங்க வீட்ல சம்மதம்னா, நாளைக்கு நாங்க வெண்ணில்லாவே பாக்க வர்றோம். என்ன சொல்றீங்க மாமா?”

“மாப்ள. இப்படி கூப்பிடுறதுக்கு உனக்கு இன்னுமாடா அர்த்தம் புரியல?”

சிரித்தான் தமிழ். டாஸ்மாக்கை விட்டு வெளியில் வந்தான். வானம் தெளிவாக இருந்தது.


*****

பி.கு: First attempt. மங்களகரமா இருக்கட்டும்னு சரக்க பேஸ் பண்ணி ஒரு கதை. எப்படி இருக்குன்னு சொல்லுங்க. :)

Tuesday, March 16, 2010

மது!!

மது!!
பார்வையில் போதை ஏற்றுபவள்.
கன்னத்து மச்சத்தால் உள்ளத்தில் அச்சானவள்.
சிறிய கண்கள். சிரிக்கும் பொழுது மறையும்.
ரோஜா மொட்டில் பனித்துளி எப்பொழுதும் இருக்கும்.
அவள் புன்னகை நம்மை தேவலோகத்தில் மிதக்க செய்யும்.

மது!!
அவளை தூரத்தில் பார்த்தாலே தியான நிலை அடைந்து விடுவேன்.
என்னோடு இருக்கும் பொழுது சொல்லவா வேண்டும்??
அந்த சொர்க்கத்தில் உள்ளே புகுந்தான் கயவன்.
அவளை பெற்றவன்.
என் உயிரை என்னிடம் இருந்து பிரித்தான்.
ஆனால், நாளை மீண்டும் என்னோடு இருப்பாள்,
என் பக்கத்து வீட்டு குட்டி தேவதை, மது!!

பி.கு.1: நான் ப்ளாக் ஆரம்பிச்சதுலே இருந்து 'என்னை பத்தி கவிதை எழுது'னு ஒரே அன்பு தொல்லைங்க (அமைதி! அமைதி!). அப்படி கேட்ட அன்பு தொல்லை ச்சே மதுக்காக ஒரு மொக்கை கவிதை. அது மட்டும் இல்ல, மொக்கை போட்டு ரொம்ப நாள் ஆனா மாதிரி ஒரு பீலிங்.

பி.கு.2: " 'தியான நிலை'னு சொல்லி இருக்கியே, நீ நித்யானந்தாவுக்கு சொந்தமா?" அப்படின்னு யாரவது பின்னூட்டம் போட்டீங்க, ரணகளம் ஆகி போய்டும் ஆமா. x-(

பி.கு.3: மொக்கை போஸ்ட்ன்றதுனாலே, நீங்க எப்படி எல்லாம் மொக்கையா யோசிச்சு கமெண்ட் பண்ணுவீங்கனு என் சூப்பர் பிரைன் யோசிச்சதோட பயன் தான் பி.கு.2. எப்பூடி?

Monday, March 08, 2010

பெண்கள் தின நல்வாழ்த்துகள்!!

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!
-- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை

Woman is the companion of man, gifted with equal mental capacity.
-- மகாத்மா காந்தி


HAPPY WOMEN'S DAY! :)


ஒரு பெண்ணின் படம் இங்கே கலைந்துள்ளது:

யார்னு கண்டுபிடிங்க பாப்போம்!





provided by flash-gear.com


மேல உள்ள puzzle ஒழுங்கா தெரியலேனா இங்க போங்க:

http://six.flash-gear.com/npuz/puz.php?c=v&id=3041154&k=2121844


பி.கு:- மேல உள்ள URL க்கு லிங்க் எப்படி குடுக்குறதுனு தெரியல. "Insert Hyperlink" குடுத்தாலும் லிங்க் டிஸ்ப்ளே ஆக மாட்டேங்குது. அதனால, puzzle பாக்க முடியாதவங்க சிரம படாம லிங்க் IE லே copy, paste பண்ணுங்க. யாருக்காவது லிங்க் எப்படி இன்செர்ட் பண்றதுனு தெரிஞ்சா சொல்லுங்க பா ப்ளீஸ் :)

Wednesday, March 03, 2010

அயர்ன் பாக்ஸ் சுட்டதடா..

அலாரம் ஷார்ப்பா காலை 8:30 மணிக்கு அடிச்சு எழுப்பி விட்டுருச்சு. கண்ண தொறக்க முடியாம ஒரு 5 நிமிஷம் படுக்கலாம்னு படுத்தேன். எந்திரிச்சு பார்த்தா மணி 11. ஆத்தாடி, ஆபீஸ் காப் (cab) மிஸ் ஆய்டுச்சுனு அவசர அவசரமா எந்திரிச்சேன்.


இன்னும் 15 நிமிஷத்துலே கரண்ட் போய்டும். டிரஸ் வேற அயர்ன் பண்ணலே. சரி, மொத காரியமா அயர்ன் பண்ணுவோம்னு டிரஸ், அயர்ன் பாக்ஸ் எல்லாம் ரெடியா கட்டில் மேல வெச்சேன். பிளக் போட்டு திரும்புறேன் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்னு ஒரு சத்தம். என்னான்னு திரும்பி பார்த்தா, தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தி போட்ட மாதிரி ப்ளக் பாயிண்ட்லே இருந்து நெருப்பு வருது. அய்யய்யோனு அலறி சுவிட்ச் ஆப் பண்ணேன். பிளக் பாயிண்ட், நான் சுட்ட அப்பளம் மாதிரி கருகி போய்டுச்சு. அயர்ன் பாக்ஸ் பிளக், காதலியே கண்ட காதலன் மாதிரி உருகிடுச்சு.


எச்சிலே விழுங்கிட்டு சுத்தும் முத்தும் பார்த்தேன். நல்ல வேளை லைட், ஃபேன் எல்லாம் நல்ல படியா ஓடுச்சு. ஒரு பெருமூச்சே வெளிய விட்டுட்டு, பிளக் பாயிண்ட்லே ஏதோ கோளாறு போல, நம்ம வேற பிளக் பாயிண்ட்லே போட்டு பாப்போம்னு அயர்ன் பாக்ஸ் பிளக்க வேற பிளக் பாயிண்ட்லே சொருகினேன். பயப்புள்ளே, ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்த மாதிரி ஒரு ரியாக்ஷனும் காட்டலே. இதென்னடா சோதனைனு, பக்கத்து ரூம்லே இருந்து அயர்ன் பாக்ஸ் கடன் வாங்கி அயர்ன் பண்ணி ஒரு வழியா 12:30 க்கு வீட்டை விட்டு கிளம்பிட்டேன்.


அப்புறம் தான் தோணுச்சு, நாளைக்கு அயர்ன் பண்ண வழி இல்லையே. எவ்ளோ நாள் தான் பக்கத்து ரூம்லே இருந்து கடன் வாங்குறது. நமக்குனு ஒரு பிரஸ்டீஜ் இருக்குலே. அதனால, திரும்பவும் வீட்டுக்கு வந்து அயர்ன் பாக்ஸ் எடுத்து போய் கடையிலே ரிப்பேருக்கு குடுத்தேன். அந்த கடைக்காரன் வெவரமானவன். என் நெத்தியிலே என்னாத்தே படிச்சானோ தெரியல, மேடம் சர்வீஸ் அமௌன்ட் Rs.800/- அப்படின்னு ஒரு குண்டு தூக்கி போட்டான். இதுக்கு நான் ஒரு புது அயர்ன் பாக்ஸ் வாங்கிடுவேன்னு சொல்ல, அவன் எங்க கடையிலே நெறைய மாடல் இருக்கு மேடம், பாருங்கனு சொன்னான். அவ்வ்வ்வ்வ்வ். எப்படியும் அயர்ன் பாக்ஸ் வேணும் அதனாலே, தொலையுதுன்னு ஒரு புது அயர்ன் பாக்ஸ் வாங்கியாச்சு.


இந்த களேபரம் எல்லாம் முடிய மணி 1:00 ஆய்டுச்சு. ஒரு ஆட்டோ புடிச்சு, ஆபீஸ்க்கு வந்து க்யூபிக்கில்லே பேக் வைக்கும் போது மணி 1:30. அய்யய்யோ, லஞ்ச் டைம் ஆய்டுச்சு. தன்யா வெயிட் பண்ணிட்டு இருப்பானு, பில்டிங் அதிர அவ ப்ளோருக்கு ஓடினேன். அங்க பார்த்தா, காஷ்மீர் தீவிரவாதிய கண்ட கேப்டன் மாதிரி கண்ணே உருட்டி, செவப்பாக்கி நின்னுட்டு இருந்தா தன்யா. அதே பார்த்து பயந்து, “அயர்ன் பாக்ஸ், ரிப்பேர், புதுசு வாங்கியாச்சு” னு மணிரத்னம் பட டயலாக் எல்லாம் சொல்லி, அவ கை, கால்லே விழுந்து, காண்டீன்க்கு அவள கூட்டிக்கிட்டு பறந்தேன். பசி!

Wednesday, February 24, 2010

இருப்பது நானல்ல!!

நாம் முதன்முதலில் சந்தித்தது, சென்னை விப்ரோவில்.
காபி குடிக்க வந்த வித்தி என்னிடம் கேட்ட முதல் கேள்வி: "அந்த ஏழு பேர் நீங்க தானா?"
ஏழு பேர் நாம் மூன்று பேர் ஆனது சுவாரசியம்.


♥♥♥


அந்தி நேரத்தில் கூடு தேடிச் செல்லும்
அன்னங்கள் போல் மூவரும் ஒன்றானோம்;
சிறிது காலத்தில் நம் பாதைகள் மாறுமென்று அறியாமலே!
எவ்வளவு சுகமான பயணம் அது!
மகிழ்ச்சி தருணங்கள் நிறைந்திருந்த காலம் அது!


♥♥♥


தன்யா, வித்யா: இந்த இரண்டு கவிதைகள் தான் என் நட்பின் பிரதானம்!
என் பள்ளி, கல்லூரி நட்பெல்லாம் உண்மையில் ஒன்றும் இல்லை என உணர வைத்த கவிதைகள்.


♥♥♥


அம்மாவின் முந்தானையிலிருந்து தொலை தூரம் வெளி வந்து உங்கள் நட்பின் போர்வைக்குள் பத்திரமாய் புகுந்து விட்டேன்!


♥♥♥


நம் மூவரை தாண்டி நாம் எவரை பற்றியும் சிந்தித்ததில்லை.
அதற்கு, நமக்கு கிடைத்த பரிசு, “மூவேந்தர்” பட்டம்.
சில சமயம் சுயநலம் மிக அழகானது! இல்லையா?


♥♥♥


உங்களிடம் எதுவும் மறைத்ததில்லை.
அம்மாவிடம் சொல்ல தோன்றாத விஷயமும் உங்களிடம் சொல்லிவிடுவேன்.
ரகசியங்கள் நமக்கு அலர்ஜி!


♥♥♥


சில சமயம் அம்மா, “பிரெண்ட்ஸ் கிட்டே சொல்லாதே” என்று கூறும்பொழுது, கோபமும் அழுகையும் மாறி மாறி வரும்.
ஆனால், அம்மா பேச்சை தட்ட முடியாதே. அதனால், உங்களிடம் சொல்ல மாட்டேன்.
SMS அனுப்பிவிடுவேன்.


♥♥♥


“நீ கூட இல்லைனாலும், என் மனசில் எப்போதும் இருப்பே” என்ற இனிப்பு கலந்த வாக்கியத்தை நான் கூற விரும்பவில்லை.
உங்கள் நினைவு என்னிடம் இருந்தாலும், நீங்கள் என்னுடன் இல்லை என்பது தானே கசக்கும் உண்மை?


♥♥♥


யாராவது, “நீ மாறிட்டே” என்று சொன்னால்,
“ஆமாம். அழகாய்” என்று பதில் கூறுவேன்.
இருப்பது நானல்ல. உங்களின் பிம்பமே!


♥♥♥


இவையாவும் கவிதைகள் அல்ல. என் எண்ணங்கள்.
மொக்கையாய் இருந்தாலும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று எனக்கு தெரியும்.
ஆஷா என்றாலே மொக்கைதானே?! :)


♥♥♥